![https://2.bp.blogspot.com/-kCheHhMVHo8/VvLIaRoAe7I/AAAAAAAA9B8/1La6E8Tyq2gZPULrXqC1fTTuEqrv3Pahg/s1600/tv.jpg](https://2.bp.blogspot.com/-kCheHhMVHo8/VvLIaRoAe7I/AAAAAAAA9B8/1La6E8Tyq2gZPULrXqC1fTTuEqrv3Pahg/s640/tv.jpg)
பெரம்பலூர் : இந்திய அளவில் மக்காச் சோள உற்பத்தியில் சாதனை படைத்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு. பிரதமர் மோடி கிரிஷிகர்மான் என்ற தனிநபர் சாதனையாளர் விருதும், ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அருகேயுள்ளது இனாம்அகரம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பூங்கோதை (60). இவர்கள் மகன் அறிவழகன். 60 வயதான நிலையிலும் அசராமல் கணவன் விட்டுச் சென்ற விவசாயப் பணிகளை பூங்கோதை தொடர்ந்து செய்து வந்தார். மகன் அறிவழகனும் உதவி வந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் மக்காச்சோள சாகுபடியில் தொடர்ந்து 7 ஆண்டாக தமிழக அளவில் முதலிடத்தை பெற்று வருகிறது. இங்கு இதற்கு முன் கலெக்டராக இருந்த தரேஸ்அகமது மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் மக்காச்சோள சாகுபடியை அதிகரிக்கச்செய்யவும், உற்பத்தியைப் பெருக்கவும் ஒரு ஹெக்டேரில் ஒரு லட்சம் பெருக்கும் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார்.
இதன்படி குறைந்தபட்சம் ஒருஹெக்டேர், அதாவது இரண்டரை ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்திடும் விவசாயிக்கு, வேளாண் துறை மூலம் ஆலோசனைகளை வழங்கி, இடுபொருட்கள் இலவசமாக வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இதே முறையில் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பூங்கோதையும் தன்னிடமிருந்த ஒரு ஹெக்டேர் நிலத்தில் மக்காச்சோள சாகுபடி செய்தார்.
ஏற்கனவே ஏக்கருக்கு 21முதல் 25 மூட்டைகளை அறுவடை செய்து வந்த பூங்கோதை 2014-15ம் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 51 மூட்டை என்று ஒரு ஹெக்டேரில் 143 மூட்டைகள் அறுவடை செய்துள்ளார். இதன் எடை 14,233 கிலோ.
இதை மாவட்ட வேளாண் துறை, புள்ளியியல் துறை இணைந்து நடத்தும் பயிர்அறுவடைப் பரிசோதனைக் குழு ரேண்டம் எண் அடிப்படையில் தேர்வு செய்து, மத்திய, மாநிலஅரசுகளுக்கு அனுப்பியது. இதனை மத்திய அரசு மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தது.
இதில் பூங்கோதையின் மக்காச்சோள உற்பத்தி அளவே அதிகமாக இருப்பதை அறிந்து அவரை மத்தியஅரசின் ‘கிர்ஷி கர்மான்’ எனப்படும் தனிநபர் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்தது. தமிழக அரசும் தேசிய அளவில் தானிய வகையில் அதிகப் படியான உற்பத்திக்கான முதன்மை மாநிலத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி தமிழக தலைமைச் செயலகத்தால் வரவழைக்கப்பட்ட பூங்கோதை, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு 19ம்தேதி அவருக்குப் பிரதமர் மோடி கிரிஷிகர்மான் விருதும், ரூ2லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கி கவுரவித்தார்.
மேலும் வேளாண்மையில் புரட்சி செய்த சாதனைப் பெண்மணியான பூங்கோதையை பாராட்டி பிரதமர் மோடி அவரது கால்களைத் தொடுவதுபோல் குனிந்து கைகளை நீட்டி வணங்கி கவுரப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, கணவர் இறந்த பிறகும் தளராமல் விவசாயத்தில் ஈடுபட்டு தேசியஅளவில் சாதனை படைத்த 60 வயது மூதாட்டியான பெண் விவசாயி பூங்கோதையின் சாதனை தமிழக அரசுக்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்திய பிரதமர் மோடியிடம் வாழ்த்துப்பெற்ற எங்கள் பக்கத்தூரான பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, 113 அகரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி பூங்கோதை அவர்களை வாழ்த்துகிறோம்..!
![http://epaper.dinakaran.com/pdf/2016/03/23/20160323f_01710601801.jpg](http://epaper.dinakaran.com/pdf/2016/03/23/20160323f_01710601801.jpg)
மக்காச்சோள சாகுபடியில் சாதனை படைத்தது எப்படி? பிரதமர் மோடியிடம் விருது பெற்ற பெண் விவசாயி பூங்கோதை பேட்டி
பிரதமரிடம் விருது பெற்றதால் மகிழ்ச்சி
பிரதமர் மோடியிடம் விருது பெற்றது குறித்து பெண் விவசாயி பூங்கோதை கூறுகையில், “எனக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. எனது கணவர் இறந்த பிறகு, அந்த நிலத்தில் நான் எனது மகனுடன் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த ஆண்டு ஒரு எக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டேன்.
அதனை வேளாண் அலுவலர்கள் சொல்லும் ஆலோசனையுடன் பராமரித்து வந்தேன். மக்காச்சோளம் விதைக்கும் முன்பு அந்த வயலுக்கு ஐந்து வண்டி மாட்டு எருவும், ஏரி மண்ணும் போட்டு கலந்து உழவு செய்தேன். ரசாயன உரங்களை பெருமளவு குறைத்துவிட்டு இயற்கை உரத்தை அதிகம் பயன்படுத்தினேன்.
அது நல்ல பலனை தந்தது. மக்காச்சோளம் அறுவடை முடிவில் நான் எதிர்பார்க்காத அளவுக்கு 14.4 டன் மக்காச்சோளம் மகசூல் கிடைத்தது. இதனால் தான் படிப்பு அறிவு இல்லாத எனக்கு பாரத பிரதமர் இந்த விருதை கொடுத்தார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் மேலும் ஆர்வத்துடன் விவசாயத்தில் ஈடுபட இந்த விருது ஊக்கம் அளிக்கிறது“ என்று கூறினார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.